Search This Blog

Friday, June 12, 2015

கிரேசி மோஹன் நரசிம்மாவதாரப் பாடல் & எனது வாழ்த்துரை:

கிரேசி மோஹன்  நரசிம்மாவதாரப் பாடல் & எனது வாழ்த்துரை: 



தூணப் பிளந்து அழகிய சிங்கர் பிரகலாதனை அள்ளியணைத்து அருள் பாலிக்கிறார்(நன்றி உபயம்-ரங்கம் பாலாஜி)....முன்பு எப்பவோ ‘’பாகவதத்தை’’ ‘’வெண்பாகவதம்’’ ஆக்க முயன்றபோது(பாற்கடலை குடிக்கப் போன கம்பனின் பூனைதான் நினைவுக்கு வந்தது) என் தம்பி பாலாஜி மனைவி மீரா கொடுத்த ‘’நாரயணீயத்தை’’ படித்து ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒரு வெண்பா என்று எழுதினேன்....கபிலாவதாரத்தோடு நிற்கிறது....பெருமாள் அனுக்கிரகம் இருந்தால் முடித்து விடலாம்....அப்போது எழுதிய ‘’நரசிம்மாவதாரம்’’ தங்கள் மேலான பார்வைக்கு பகிர்வு....கிரேசி மோகன்....
நரசிம்மாவதாரம்....
------------------------
அல்லில் பகலில் அகத்துள் அதன்வெளியில்
புல்புழு பூச்சி பறவையால் -கொல்லும்
மனிதனால் காட்டு மிருகத்தால் சாகா
தனதுயிர் கேட்டுத் தவம்....(1)
இரணியன் வேள்விக்(கு) இரங்கி அயனும்
வரனெனத் தந்தனன் வாக்கு -தரணிகள்
மூன்றையும் வென்றஅம் மூர்கன் மகனாக
தோன்றினன் நாரணத் தொண்டு....(2)
''நாரா யணஓம் நமஹவை நாள்தோறும்
பாரா யணம்செய் பிரகலாதா'' -பூரண
கர்ப வதிகயாது காதுவழி சேய்க்குரைத்தான்
நற்கதியை நாரதன் நன்கு....(3)
’’அச்சுதன் நாமம் அனவரதம் ஓதுவோனை
அச்சுறுத்தி தன்வழிக்(கு) ஆட்படுத்த -அச்சன்
இரணியன் போட்ட இடர்களைத் தாண்டி
மறையென நின்றான் மகன்....(4)
முட்டவந்த ஆனைககள் எட்டு திசைகளிறும்
முட்டியிட்டுச் சுட்டி மழலையை -வட்டமிட்டு
காட்டியபின் கூறும் கஜேந்திர மோட்ஷத்தைக்
கூட்டியவன் பக்தனுக்கு காப்பு....(5)
பக்தீயில் மூழ்கும் பிரகலாத சாமியை
பத்தி எரியும்தீ பூவாகி -சுத்திவரும்
மீறிய நஞ்சும் மிதமாய் அமிழ்தாகும்
சூரியன்மேல் வைப்பாரோ சூடு !....(6)
விண்முகடு கொண்டுபக்தி வீரத்தை வீசிட
மண்மகள் ஏற்றாள் மலர்மகளாய் -பின்முதுகில்
பாறையைப் பாம்பால் பிணைத்தாழி போட்டிட
பேரலை போலெழுந்தான் பிஞ்சு....(7)
கோவிந்தா என்றுரைக்க குத்தவந்த ஈட்டியின்கண்
நாவின்தன் மென்மையாய் நைந்தது -சாவிந்த
பிள்ளைக்கு இல்லையென போயுரைத்தார் மன்னனிடம்
நொள்ளையான ஆட்கள் நமுத்து....(8)
ஆருனக்குத் தந்தார் அதிசிய சக்தியை
கூறெனக்கு என்று கொதித்தஅப -சாரனுக்கு
நாரண சக்திக்கு பூரண பக்தியே
காரணம் என்றான் கொழுந்து....(9)
காட்டடா அந்தக் கருநீலப் பூதத்தை
போட்டடைப்பேன் இத்தூணில் பூச்சியாய் -வேட்டையை
ஆடத் துவங்கிய அப்பனுக்குக் காட்டினான்
கூடத்து தூணுக்கே கை....(10)
பக்தப் பிரகலாதன் பேச்சை ருஜுப்படுத்த
சக்திக்கு மீறிய சங்கடமாய் -திக்கெட்டை
தேகமாய்க் கொண்டவன் ஏகினான் தூண்வேக
வேகமாய் வைகுண்டம் விட்டு....(11)
கள்ளத் தனம்செய்தென் பிள்ளை பிடித்தவனே
உள்ளத் துணிவிருந்தால் ஊர்ந்துவா -முள்ளிட்ட
பாதுகையால் தூணுதைக்க பாதிநர பாதிசிங்கம்
காதுசிகை கோதி குதிப்பு....(12)
சாயங்கா லம்வரை சண்டை புரிந்தந்த
சீயங்கா லைமடித்து, சோர்ந்தெழுந்து -பாயும்
இரணியனை தூக்கி இடைவாசல் வைத்து
கரநுனியால் கீறிக் கிழிப்பு....(13)
ஆவேச மான அரியை அடக்கிட
பூவாசத் தாயே பயந்திட -சாவாச
மாகவந்த பிள்ளை மடியமர்ந்து சிங்கத்தின்
தேகம் தழுவத் தணிவு....(14)
கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
உச்சரிக்க நாமம் உரத்தப்போ -உச்சி
குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
மெலிந்துகர் ஜிக்க மியாவ்....(15)
ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
களைத்தல் கதையின் கருத்து....(16

Crazy Mohan's photo.

எனது வாழ்த்துரை:
நரசிம்மன் கதை சொன்ன மோகனே நீரிங்கே
வரசிம்மன் அருள்பெற்று வளம் பெற்று வசனத்தில்
பெருசிம்மம் யாவரிலும் பேரொளியாய்த் திகழத் தவம்
தருசிம்மம் பெரியவாளின் பதம்வணங்கி வேண்டுகிறேன்!

கிரேசி மோஹன் திருவல்லிக்கேணி பெருமாள் & எனது வாழ்த்துரை:

கிரேசி மோஹன் திருவல்லிக்கேணி பெருமாள் கோவில் மஹா சம்ப்ரோக்ஷணத்தின்போது கேஷவின் ஓவியம் பார்த்து  எழுதிய வெண்பா:



கிரேசி மோஹனின் வெண்பா:


For the inimitable painting of Shri Keshav, Crazy Mohan's VeNbA.
"அல்லிக் குளக்கரையான், அர்ஜுனர்க்கு கீதையை,
சொல்லிக் களம்புகுத்தும் சாரதியின், -பள்ளிக்கு(கோயிலுக்கு),
கும்பா பிஷேகமின்று, கட்டாயக் காப்புண்டு,
நம்பாள் நரநார ணன்"....கிரேசி மோகன்....
Khaanthan Balakrishna Sastri's photo.

For the inimitable painting of Shri Keshav, Crazy Mohan's VeNbA.
"அல்லிக் குளக்கரையான், அர்ஜுனர்க்கு கீதையை,
சொல்லிக் களம்புகுத்தும் சாரதியின், -பள்ளிக்கு(கோயிலுக்கு),
கும்பா பிஷேகமின்று, கட்டாயக் காப்புண்டு,
நம்பாள் நரநார ணன்"....'வலம்புரி சங்கேந்தி, வாத்ஸல் யமாக,
களம்புகா பார்த்தனுக்கு கீதை -நலம்புரி,
அம்பாள் சகோதரர் அல்லியூர் ஆலயத்தில்,
கும்பா பிஷேகக் களிப்பு''.....கிரேசி மோகன்....
----------------------------------------------------------------------------------------------------------
''மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி
ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம் -பூசைக்கு
ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
வாழ்வோனை நெஞ்சே வணங்கு''....
பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வாழும் ''அழகிய சிங்கர்''....
--------------------------------------------------------------------------------------------------------
''பாலுக்கும் காவலாய் பூனைக்கும் தோழனாய்அப்
பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலே
பழகிடப் பூனையே, பாய்ந்தால் புலியே
அழகிய சிங்கா அருள்''....
திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார் சன்னிதியில்....
----------------------------------------------------------------------
''வேதவல்லித் தாயே வினைதீர்க்கும் செங்கமலப்
பாதவல்லி பார்த்தன்தன் சாரதியின் -கீதவல்லி
ஏதமில்லா ஞானத்தை ஏதுமில்லா மோனத்தை
சாதகனென் சிந்தையில் சேர்...
(பொது)
------------------
''என்னத்தைக் கண்டேன்நான் உன்பித்தம் கொண்டதால்
கண்ணைத் திறந்துகேள் கார்முகிலே -உன்னொத்த
தெய்வமிங்(கு) இல்லையென்ற தற்பெருமை தேவையா
தொய்வுறுமுன் தற்பரமே தோன்று''....கிரேசி மோகன்....கிரேசி மோகன்....

எனது வாழ்த்துரை:
கிரேஸியே உன்னிடம் வெண்பா அருவிபோல்
ஈஸியாய் வருவதால் இனிமேல் - யோஸிக்க
எதுவுமில்லை உடனே டிராமாவை வெண்பாவில் 
புதுமையாய் செய்து முடி!!

கிரேசி மோஹன் வெண்பா & எனது வாழ்த்துரை


கிரேசி மோஹன் வீட்டுக்கு வேளுக்குடி கிருஷ்ணன் வந்தபோது, கிரேசி மோஹன் எழுதிய வெண்பாவிற்குப் பதிலாக எழுதியது.


கிரேசி மோஹனின் வெண்பா:

அடியேன் அகத்திற்கு வேளுக்குடி கிருஷ்ணன் இன்று விஜயம் செய்தார்....வேளுக்குடியாரை வரவேற்று வெண்பா எழுதி அவர் ஸெல்லுக்கு மெசேஜாய் அனுப்பினேன்....வெண்பா இதோ...


''தோலுக்(கு) அடிமையாய் , தோற்றம் சதமென்று,
வாலைப் பிடித்திழுத்தேன் வன்புலியை(புலனை): -வேளுக்,
குடியாரே வந்தென் குடிபுகுந்(து)அம் மாலுக்(கு),
அடியாராய் மாற்ற அருள்''....கிரேசி மோகன்..


எனது வாழ்த்துரை:

குடில் வந்த கிருஷ்ணரை, வேளுக்
குடி தந்த கிருஷ்ணரை -நாடி
எதிர்கொண்ட கிருஷ்ணா, சாக்லேட்சிரிப்
பதிர்கின்ற கிருஷ்ணா வாழ்க!


Saturday, May 2, 2015

"ஐயோ" : (அ) மங்கலச் சொல்லா : "Aiyo" : is it a amangalam word?

"ஐயோ" : (ங்கலச் சொல்லா

ஐயோ என்பது தமிழிலே, அமங்கலத்தக் குறிக்கும் ஒரு சொல்லாகவே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரணமாக, ஒரு பயமோ, அதிர்ச்சியோ, துயரமோ வரும்போது, இந்த "ஐயோ" என்ற வார்த்தை, கையாளப்படும். 

ஆனால், ஒரு ஆச்சரியமோ, அற்புதத்தினையோ குறிக்கும்போது, இதனை உபயோகப்படுத்தலாமா? தாராலமாகச் செய்யலாம் என்று, கம்பனாடனும், ஒரு ஆழ்வாரும், நமக்குக் காட்டுகிர்றர்கள். அவை என்ன பாடல்கள் என்று பார்ப்போமா?

கம்பநாடன்: கம்பராமாயணம்: 

"
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய, 
'
பொய்யோ' எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ, மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ,
ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்"

அத்தனை உவமையையும் போட்டுப் பார்த்துவிட்டு, கம்பன், அந்த ராமனின் அழகை அதற்கு மேலும் விளக்க முடியாமல், "ஐயோ, என்ன அழகுடா இவன்" என்று சொல்லிவிடுகிறான்!

திருப்பணாழ்வார்அமலனாதிபிரான்இரண்டு முறை "ஐயோ" வருகிறது - பத்து பாடல்களுக்குள்ளேயே!

கையினார் சுரி சங்கனல் ஆழியர், நீள்வரை போல்-
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடியெம்
ஐயனார், அணியரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்,
செய்ய வாய் ஐயோ. என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. (7)

ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்
நீல மேனி ஐயோ, நிறை கொண்டது என் நெஞ்சினையே.  (9)



Saturday, June 8, 2013

"இயேசு நாதர் மட்டும் அங்கு வரவில்லையே! என் இனிய பாரத தேசமே" : பாரதிதாசன்

"இயேசு நாதர் மட்டும்   அங்கு வரவில்லையே! என் இனிய பாரத தேசமே"

பாரதிதாசன்



தங்க நகை வெள்ளி நகை ரத்தினமிழைத்த நகை
தையலர்கள் அணியாமலும்,
விலை குறைந்த ஆடைகள் அணிந்துமே
கோவில் வர வேண்டுமென்று பாதிரி
விடுத்த ஒரு செய்தியால்,
கோவிலை விஷமென்று வெறுத்தார்கள்
பெண்கள், புருஷர்!

நிலை கண்ட பாதிரி பின்
கை, காது , மூக்கு, செவி, உதடு, கழுத்து,
நிறைய நகை போடலாம்,
கோவிலில் முகம் பார்க்க
நிலைக் கண்ணாடியும் உண்டென்று
இலை போட்டழைத்ததும்,
நகை போட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்து சேர்ந்தார்!

இயேசு நாதர் மட்டும்
அங்கு வரவில்லையே!
என் இனிய பாரத தேசமே!!


இது, பாரதிதாசன் பாடல் என்று நினைவு. தெரிந்தவர்கள் யாரேனும், இது யார் பாடிய கவிதை என்று எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்!

மிக அழகான கவிதை. விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

என்ன ஒரு எள்ளல்! என்ன ஒரு துள்ளல் கவிதையில்!

கோவிலுக்குப் போவதென்பது மிகப் பலருக்கு, ஒரு பொழுதுபோக்குதான் என்பதை மிக அழகாகச் சொல்லும் கவிதை. யாருமே கோவிலுக்கு வரவில்லையென்றால், அந்த பாதிரியாரோ, மற்ற குருமார்களோ என்ன செய்வார்கள்? அவர்களது வயிற்றுப் பிழைப்பு என்னாவது? அதனையும் கொஞ்சம் எள்ளலுடன் பார்க்கும் கவிதை. இவர்கள் அத்தனை பேரும், அழகாக நகை அணிந்து, கோவிலுக்குப் போய்தான் என்ன? வர வேண்டிய அந்தக் கடவுள் அங்கே வரவில்லையே என்ற அந்த அழகிய சொடுக்கு! அழகு!!

Saturday, February 2, 2013

Summa iru, sollara' : Arunagirinathar Thiruppugazh

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
"சும்மா இரு, சொல்லற" என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!


இந்தப் பாடலின் அழகு யாரும் சொல்லி அறியவேண்டியது இல்லை!

சிவபதவி அடைந்துவிட்ட எனது பெரிய தகப்பனார் திரு. சுந்தரேஸ்வரன், (பிக்ஷாண்டார்கோயில், திருச்சி), இந்தப் பாடலைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார்!

குறவர் கூட்டத்திற்குத் தலைவனான 'செம்மானின்' மகளான வள்ளியைத் திருடி மணம் கொண்ட அந்த முருகப் பெருமான், பிறப்பும் இறப்பும் இல்லா அந்தப் பெருமான், எனக்கு உபதேசம் செய்தான். "சும்மா இரு. சொல் அற" என்றான். அந்த மாபொருள் ஒன்றும் விளங்கவில்லையே!" என்று பேசுகிறார் அருணகிரினாதர்.






'அம்மா பொருள் ஒன்றும்" என்ற தொடர் மிக அழகு! 'அம் மாபொருள்' என்று கொள்வதா? இல்லை, 'அம்மா! பொருள் ஒன்றும்' என்று கொள்வதா? தமிழிலே, இயலாமையைக் குறிக்கும்போதும், வியப்பினைக் குறிக்கும்போதும், 'அம்மா' என்ற தொடரை உபயோகப்படுத்துவது ஒரு மரபு. அந்த மரபினை ஒட்டி இங்கே 'அம்மா' என்று விளிக்கப்பட்டதா? இல்லை, 'அம் மா பொருள்' என்று வியப்பினால் சுட்டப்பட்டதா?

இரண்டுமே இங்கே பொருந்தும் என்றே தோன்றுகின்றது!

'அந்த மா பொருள் ஒன்றும், அம்மா! விளங்கவில்லயே' என்றுதான் அருணகிரியார் சொல்லியிருப்பார் என்று தோன்றுகின்றது!

'சொல் அற' என்ற பதமும் மிக வியப்புதான். வெறும் பேச்சு இன்றி இருத்தல் இல்லை இது. வாய்ப்பேச்சை மட்டும் இது குறிக்கவில்லை. மனத்தில் எழும் எண்ணங்களையும் சேர்த்தே குறிக்கிறது. மனதிலே எண்ணங்கள் தோன்றினால், சொல் எழும். சொல் அற்றுப்போவது என்றால், மனதிலே எண்ணங்களும் இல்லாமல் போவதுதான்!

இப்படி, சொல் இன்றி, சொல் எழும் வித்தான் எண்ணங்கள் இன்றி, சும்மா இருத்தல் என்பது மிகவும் முயற்சி எடுத்து அல்லவா செய்யப்பட வேண்டியது! 'சும்மா இருத்தலுக்கு' எத்தனை முயற்சி வேண்டியிருக்கிறது! எத்தனை சாதனை செய்ய வேண்டியிருக்கிறது!

இத்தனைப் பொருளும் அடங்கியிருப்பதால்தானோ என்னவோ அருணகிரினாதர், 'அம் மாபொருள் ஒன்றும் அறிந்திலனே' என்று சொல்லி விட்டார்!

அற்புதமான பாடல் வரிகள்!!

Pallandu, Pallandu pallayiraththaanu palakodi noorayiram": "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு"

பெரியாழ்வார் திருமொழி


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட தோள் மணிவண்ணா ! உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு!






கடவுளை வணங்கி தாம் கோரி வந்ததைப் பெறுவது - அது பொருள் வேண்டி வந்தாலும் சரி அல்லது அருள் வேண்டி வந்தாலும் சரி - வேண்டி வந்ததைப் பெறுவதே பக்தி என்று இருந்ததை மாற்றி, 'ஆண்டவனே! நான் நன்றாக இருக்க வேண்டும்'; 'எனது சுற்றாம் நன்றாக இருக்க வேண்டும்'; 'எனது நகரம் , நாடு நன்றாக இருக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை எல்லாம் தாண்டி, 'அப்பா! நீ நன்றாக இருக்க வேண்டும்' என்று அவனிடமே வேண்டிக் கொள்வது ஒரு புதிய கோணம். ஒரு அழகிய பார்வை. பக்தியிலே இது முற்றிய பக்தி.

அவனே எல்லாம் என்றால், அவன் நன்றாக இருந்து விட்டால் அனைவரும் நன்றாக இருப்போம் அல்லவா?

இத்தனை உலகங்களையும் படைத்தும், காத்தும் வருபவன் அவன். அனத்து உலகங்களும் இருப்பதும் அவனுள்ளேதான். அவன் பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு செவ்வனே இருந்த்துவிட்டால், அவனுள்ளே இருக்கும் அனத்தும் உலகங்களும் செவ்வனே இருந்துவிடும் அல்லவா!



 


இப்படி, யார் இந்த வாழ்க்கைக்கெல்லாம் மூல காரணமோ, அவனை வாழ்த்தி, அவன் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று அவனிடமே கேட்பதென்பது நிச்சயமாகப் புதுமையான ஒன்றுதான்!

அதனால்தான், இவரைப் 'பெரிய ஆழ்வார்' என்று தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடுகிறது!!